கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதாக பாரத் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படுவதால், ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் மட்டும் 5 முறை வட்டி விகிதங்களை குறைத்தது. இந்தியாவின் ஜிடிபி விகிதம் 4.5 சதவீதமாக இரண்டாம் காலாண்டில் சரிவடைந்த நிலையில், வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வியாழக்கிழமை வட்டி குறைப்புக்கு தற்போது எந்தவித அவசரமும் இல்லை ஏனெனில் இதற்கு முன்பு செய்த வட்டி குறைப்பு எவ்வாறு செயல்பட போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான எஸ்.பி.ஐ கடன்களுக்கான வட்டியை குறைப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து கடன்களுக்குமான, குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது நடப்பு 8 சதவிகிதத்திலிருந்து 7.90 சதவிகிதமாக குறைத்துள்ளதாகவும், இது டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் என்றும் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 8 முறையாக குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்த வட்டி விகித குறைப்பினால், இனி மாத மாதம் இஎம்ஐ கட்டும் வாடிக்கையாளர்கள் பெரும் பயனடைவார்கள். ஏனெனில் பேஸ்ரேட் முறையில் கடன் பெற்றவர்கள் செலுத்தி வரும், அதிகப்படியான இஎம்ஐ தொகை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வட்டி குறைப்பானது அனைத்து கடன்களுக்கும் பொருந்தும் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் வாகனக் கடன், வீட்டுக்கடன் என பல வகையான கடன்களுக்கு வட்டி விகிதம் குறையாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்திருந்தாலும், சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.